கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு வந்தபோது கல்லால் அடிப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதி விட்டு ஜாதி கல்யாணம்! 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர்! காதல் தம்பதியை கல்லால் அடித்து கொன்ற பயங்கரம்!
கர்நாடக மாநிலத்தில் கடக் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட லக்காலாகட்டி கிராமத்தில் ரமேஷ் மாதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த கங்கம்மா என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த செய்தியானது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
2015-ஆம் ஆண்டில் பெற்றோரின் எதிர்ப்பிற்கு எதிராக திருமணம் செய்துக்கொண்டனர். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து கூலி வேலை செய்து பிழைத்தனர்.
இதனிடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினர். ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே பொதுமக்கள் அவர்களை அடையாளம் கண்டுபிடித்தனர். உடனடியாக பலர் அவர்கள் மீது கற்களை வீசி எறிய தொடங்கியுள்ளனர்.
தம்பதியினர் நடுரோட்டில் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.