உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ள கோயில், ஒரு கோடி லிங்கங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இதுதான்!

கர்நாடக மாநிலத்தில் தங்கசுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் அமைந்திருக்கிறது கோடி லிங்கேஸ்வரர் கோயில் .


இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இக்கோயிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்கு கோடி லிங்கேஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.

கோடிலிங்கேஸ்வரர் கோயிலானது 1980ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ததன் விளைவே கோடிலிங்கங்கள் சேரக்காரணம் ஆகும்.

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் 108அடி உயரமுடைய சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது. மேலும் இக்கோயில் வளாகத்தினுள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன

கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் இருக்கும் கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும் நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மலர் மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டியும் சிவபெருமானை மனதுருகி வேண்டி நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறை கட்டிச்செல்கின்றனர்.

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு 10 பூசாரிகளால் மேளவாத்தியங்கள் முழங்க பூசைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் ஒரு கோடி லிங்கங்களுக்கும் நாள் தவறாமல் பூசைகள் செய்யப்படுகிறது சிறப்பு.

இக்கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை இருக்கிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவ லிங்கத்தை இக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்கின்றனர். இந்த லிங்கங்கள் பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஏழைகள் பயனுறும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள் 15-20 ஜோடிகளுக்கு இக்கோயிலின் நிறுவனரான சுவாமி சாம்பசிவ மூர்த்தியால் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.