5 மாத பிஞ்சுக்குழந்தையை தவிக்க விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுமணத் தம்பதி..! நெஞ்சை உலுக்கும் காரணம்!

குடும்பத்தகராறு காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வேப்பந்தட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள காரியனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மகளின் பெயர் சத்யாதேவி. சத்யாதேவியின் வயது 23. இவருக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய மகனான கணேசன் என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்றுள்ளது.

குழந்தையின் பிரசவத்திற்காக சத்யாதேவி தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தை பிறந்து 5 மாதங்களாகியும் சத்யா தேவி அங்கேயே இருந்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வரவேண்டும் என்று கணேசன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யாதேவி தன்னுடைய அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து   கொண்டார். சத்யாதேவி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு எடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சத்யாதேவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், மனைவி இறந்த செய்தியை கேட்டறிந்த கணேசன் மன உளைச்சலால் அதே வீட்டின் மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலையும் வைத்து எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த 5 மாதங்களேயான குழந்தையை தவிக்க விட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.