பல டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகள் படிப்பை கோட்டை விடுவது ஏன் ??

இப்போது டீன்-ஏஜ் வயதினர் சரியாக படிப்பதில்லை, மதிப்பெண்கள் எடுப்பதில்லை என்று சொல்லப்படும் புகார் அதிகரித்துக்கொண்டே வருகிறது.


ஐந்தாம் வகுப்பு வரையிலும் என் பிள்ளை சூப்பராக படித்தான். அதற்குப் பிறகு அவன் மூளை கெட்டுவிட்டது. ஊர் சுற்றத் தொடங்கியதால் படிப்பும் போச்சு, மார்க்கும் போச்சு என்று ஏகப்பட்ட பெற்றோர்கள் புலம்புகிறார்கள்.

ஏன் இவர்கள் மதிப்பெண்கள் எடுக்க சிரமப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் மிகவும் சிம்பிள்.


ஆம், ஐந்தாம் வகுப்பு வரையிலுமான பாடத்திட்டம் குழந்தைகளுக்கானது. அதனால் மிகவும் எளிமையாகவே இருக்கும். படிப்பு என்பதை விளையாட்டு போலத்தான் படிப்பார்கள். ஆசிரியர்களும் மதிப்பெண்கள் போடுவதற்கு கஞ்சத்தனம் காட்டுவதில்லை.


ஆனால், ஆறாம் வகுப்பில் இருந்து நிலைமை மாறுகிறது. நிறையநிறைய பாடங்கள், ஏராளமான பரிட்சைகள் என்பதால் திணறுவார்கள். ஆசிரியர்களின் கண்டிப்பு அவர்களை மேலும் பயமுறுத்தும்.  சின்ன வகுப்புகளில் மனப்பாடம் செய்து ஒப்பித்தது போல் இந்த வகுப்புகளில் செய்யமுடியாது. இந்த திடீர் மாற்றங்களை ஒரு சில மாணவர்கள் மட்டும்தான் எளிதில் ஏற்றுக்கொள்ளும் திறனுடன் இருப்பார்கள். மற்றவர்களுக்கு இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள சில காலம் எடுக்கத்தான் செய்யும்.


இந்த நேரத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு மீண்டும் மீண்டும் புரியும்படி பாடத்தில் உதவி செய்யவேண்டியது அவசியம். இந்த உண்மை புரியாமல் மதிப்பெண்கள் குறைகிறது என்று கோபத்தைக் காட்டுவார்கள். பள்ளியிலும் அவமானம்தான் கிடைக்கிறது. இவற்றை எல்லாம் கண்டு வெதும்பும் டீன் ஏஜ் வயதினர், படிப்பின் மீதே கோபம் கொள்கிறார்கள். நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இழந்துவிடுகிறார்கள்.

மதிப்பெண்களால் ஒருவரை நிர்ணயம் செய்வது சரியல்ல என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும். படிக்கும் சூட்சுமத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டுமே தவிர, தண்டிக்கவோ கோபம் கொள்ளவோ கூடாது. அதிக மதிப்பெண்கள் எடுக்கமுடியவில்லை என்பது அவர்கள் குறைபாடாக மட்டும் இருப்பதில்லை என்பதை பெற்றோர் உணரவேண்டும்.


கடுமையான பாடம், புரியாமல் சொல்லித்தரப்பட்டது, வீடுகளில் போதிய உதவி கிடைக்காதது போன்ற எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அதனால் படிப்பில் டீஜ் ஏஜ் வயதினரை குற்றம் சாட்டும் முன், பெற்றோர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.