காடுவெட்டி குருவுக்கு பதில் பு.த.அருள்மொழி! வன்னியர் சங்கத்தில் ராமதாசின் சடுகுடு ஆட்டம்!

வன்னியர் சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் புவனகிரி அருகேயுள்ள புதுபூலான்மேடு எனும் பகுதியில் பிறந்தவர் அருள்மொழி. இவருடைய தம்பியின் பெயர் இளங்கோவன். இளங்கோவன் பாமகவில் இருந்து வெளியேறி தற்போது அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். அருள்மொழி அவ்வாறு இல்லாமல் பாமகவின் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்கிறார். மேலும் ராமதாஸின் நம்பிக்கை பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார். இவர் ஏற்கனவே வன்னியர் சங்கத்தின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு. பாமகவுக்கும், ராமதாஸின் குடும்பத்திற்கும் காடுவெட்டி குரு செய்த சேவையை யாராலும் மறந்துவிட இயலாது. பாமக 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட அனைத்து உதவிகளையும் செய்தது வன்னியர் சங்கம்.

வன்னியர் சங்க பிரதிநிதிகள் தங்களால் இயன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வடமாவட்டங்களில் பாமகவை மாபெரும் சக்தியாக உருவாக்கினர். பல தொகுதிகளில் அதிமுகவிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வன்னியர் சங்க பிரதிநிதிகள் களப்பணி ஆற்றினர்.

இதனிடையே சென்ற ஆண்டு காடுவெட்டி குரு இறந்து போனார். ஓராண்டிற்கு மேலாக இந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. வன்னியர் சங்க உறுப்பினர்கள் ராமதாசிடம் கோரிக்கை வைத்து தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளனர். அதற்கேற்றவாறு ராமதாஸ் நேற்று அருள் மொழியை வன்னியர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்து அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவிப்பானது வன்னியர் சங்க பிரதிநிதிகள் இடையே எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.