அண்ணாமலையை எப்போ கைது செய்யப் போறீங்க..? நாம் தமிழர் கேள்வி

அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் எதற்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.


சவுக்கு சங்கரை கைது செய்தீர்கள். டெல்லிக்குப் போய் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தீர்கள். அண்ணாமலையை எப்போ கைது செய்யப் போறீங்க? இப்ப தெரிஞ்சுடும் உங்க வீரமெல்லாம் என்று நாம் தமிழரின் இடும்பாவனம் கார்த்திக் தி.மு.க. அரசுக்கு சவால் விட்டிருக்கிறார்.

மேலும அவர், ’அறிஞர் அண்ணா குறித்து பேசியதற்காக வழக்கு தொடுக்க ஆளுநரே ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அண்ணாமலையை எப்போது கைது செய்யப் போறீங்க? என்று கேட்டிருக்கிறார்.

அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் எதற்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மனை பற்றி அண்ணா சில கருத்துகளை தெரிவித்ததாகவும், அதற்கு அடுத்து பேசிய முத்துராமலிங்க தேவர், அம்மனை பற்றி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால், அவர்களின் ரத்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு சென்னை ஓடிவந்தார்’ என்று அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் பேசியதற்கு அந்தக் காலக்கட்டத்தில் வெளியான செய்தித்தாள்களில் ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது பியூஷ் மனுஷ் சேலம் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தால் இதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்

அதன்படி, பியூஷ் மனுஷ் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்த தமிழக அரசு, அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த ஆளுநர் ரவியும், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு இன்று ஓர் ஆணையை வெளியிட்டது. இதன் நகல் சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த சில தினங்களில் விசாரணைக்கு வரும் போது, அண்ணாமலையை ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

எனவே, இந்த வழக்கில் கவர்னர் எந்த ஒப்புதலும் தரவில்லை. அண்ணாமலை மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். தமிழ்நாடு அரசின் அல்லது மாநில அரசின் அறிவிப்புகள் கவர்னர் பெயரில்தான் வெளியிடப்படும். இது வெறும் நடைமுறை. கவர்னருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

அண்ணாமலை மீது IPC 153A, & B உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர அதாவது இரு குழுக்கள், இரு சமூகம் இடையே கலவரத்தை, பிளவை, விரோதத்தை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு போடும் பிரிவு (HATE SPEECH) என்பதாலே இந்த அனுமதி அவசியமாகிறது.

இந்த விவரம் கூட தெரியாமல் அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டதாக நாம் தமிழர் தம்பிகள் பேசலாமா என்று தி.மு.க.வினர் கிண்டல் செய்கிறார்கள்.