நாடி ஜோதிடத்தில் எதிர்கால உண்மை தெரியுமா? ஆச்சர்ய தகவல்கள்!

இந்த பூமியில் பிறந்த மனிதர்களின் எதிர்காலம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு, நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்க்கையை குறித்து எழுதி சென்ற ஓலைச்சுவடிகளைதான் நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம்.


நாடி ஜோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையை வைத்து அவருடைய கைரேகைக்கு தொடர்புடைய ஏடுகளைக் கண்டுபிடித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் அவருக்கு தொடர்பான விஷயங்களை வாசித்து விளக்கி கூறப்படும் ஒரு கலையாகும்.

மனிதனின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய விரிவான விவரங்கள் பனை ஓலைகளில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம். ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.

நாடி ஜோதிடம் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர் பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும்போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.

மேலும், நாடி ஜோதிடத்தில் எதிர்காலம் சார்ந்த கருத்துக்களும், அதை சார்ந்த பல விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. சில விவரங்கள் தற்போதைய அல்லது கடந்த காலத்துடன் தொடர்புடையவை. ஒவ்வொரு ஓலைக்கும் வித்தியாசமான பதில்கள் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன.

நாடி ஜோதிடர்களில் சிலர் மட்டுமே ஒருவரின் எதிர்காலம் குறித்த உண்மை தகவல்களை அச்சுவடியில் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்பட்டு இருக்கும். அகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும் இந்த ஏடுகள் 12 காண்டங்களும் 4 தனிக் காண்டங்கள் பற்றியும் கூறுகிறது.

முதல் காண்டம் - வாழ்க்கையில் பொதுப்பலன்கள்

இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்கள்

மூன்றாம் காண்டம் சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்

நான்காவது காண்டம் – தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மற்றும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்கள்.

ஐந்தாம் காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுகிறது

ஆறாம் காண்டம் - வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.

ஏழாம் காண்டம் - திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்றி கூறுகிறது.

எட்டாம் காண்டம் - உயிர்வாழும் காலம் ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.

ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது

பத்தாவது காண்டம் – தொழில் பற்றி கூறுகிறது.

பதினோராவது காண்டம் - லாபம் பற்றி கூறுகிறது.

பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது

தனி காண்டம்: சாந்தி காண்டம் - வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.

தீட்சை காண்டம் – மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது

ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுகிறது.

திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.