அயோத்தி வழக்கு என்றால் என்ன? இன்று நாடே பரபரப்பாக இருக்க காரணம் என்ன? முழுப் பின்னணி!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் அந்த வழக்கு குறித்த விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


அயோத்தி பிரச்சினை என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் கொண்டு போய் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. 1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின.

மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர்.

இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடத்தில் சுமார் 2.77 ஏக்கர் நிலத்திற்கு மூன்று அமைப்புகள் உரிமை கோருகின்றன.  

2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும், இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்புக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.