கோயிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கோயில் என்பது கடவுள் இருக்கும் இடம். நமது பக்தியைச் செலுத்தக் கோயிலுக்குச் செல்கிறோம். இந்த உலகத்தில் பரிசுத்தமான ஓர் இடம் என்றால் அது அன்றும் இன்றும் கோயில்தான்!


அந்த இடத்துக்குப் போய் அவரை தரிசனம் செய்து திரும்பும்போது கால் கழுவக் கூடாது. நாம் முழுக்கவே சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் தனியே சுத்தம் செய்வானேன்? எங்கேயெல்லாம் கால் கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். புது வேஷ்டி கட்டியிருந்தால், வெளியில் நடந்துவிட்டு வந்தால் கால் கழுவ வேண்டும்.

கல்யாணத்தில் பரதேசிக் கோலத்தில் கோயிலுக்குப் போகிறான் மணமகன். பகவானைக் கும்பிடுகிறான். திரும்பி வந்தவுடன் அப்படியே ஊஞ்சலில் உட்கார்கிறான். கால் கழுவுவதில்லை. அதன் பிறகு காலில் நலுங்கு அது இது எல்லாம் வைத்த பிறகு, கழுவ வேண்டுமே என்று கழுவுகிறான்.

பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்ப தால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை. தேர் இழுக்கிறோம். அங்கே ஒரு வித்தியாசமும் இல்லை. அங்கே ஒருவருக்கு ஏதோ தீட்டு இருக்கிறது என்றால் கவலையே இல்லை...

தேர் வடத்தைத் தொட்ட உடனேயே எல்லாத் தீட்டும் போய் விடுகிறது. கோயிலில் இருந்து திரும்பும்போது மழை வந்துவிட்டது. சேற்றில் கால் வைத்துவிட்டீர்கள் என்றால் அப்போது கால் கழுவலாம்.