நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?

நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.


நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. 

முதல் நாள்: வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். 

இரண்டாம் நாள்: புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். 

மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 

நான்காம் நாள்: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும். 

ஐந்தாம் நாள்: தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம். 

ஆறாம் நாள்: தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். 

ஏழாம் நாள்: எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும். 

எட்டாம் நாள்: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம். 

ஒன்பதாம் நாள்: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டல்  நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம். 

பத்தாம் நாள்: விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம்.