வெற்றி வேண்டுமா? வராஹி அம்மனை வழிபடுங்கள். தமிழர்களின் ஆதி தெய்வம் வராஹி மகிமை!

தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் ஆலயத்தின் அக்னி திசையில் அம்பாள் சந்நிதிக்கு எதிரில் வராஹி அம்மனுக்கு கோவில் உள்ளது.


இராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களைத் தேர்வு செய்தார். ஆனால் ஒரு இடமும் சரியாக அமையாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு புறப்பட்டு சென்றபோது ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனை அவர் துரத்திச் சென்றார்.

ஆனால் அது போக்கு காட்டி பல இடங்களுக்குச் சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக்கொண்டது. இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியது. இது குறித்து ராஜராஜ சோழன் அரண்மனை ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார்.

அப்போது கோவில் கட்ட இடத்தினை வராஹி தேவி தேர்ந்தெடுத்து இருப்பதைத் தெரிவித்தார் ஜோதிடர். அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார் ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அதிசய தலம் கட்டிடக்கலையின் சிறப்பையும் தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

சோழ மன்னர்களின் வெற்றி தேவதையாக வராஹி அம்மன் விளங்கினாள். சோழமன்னர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பு வராஹிக்கு சிறப்பு வழிபாடு செய்வர். ராஜராஜசோழன் வராஹி அம்மனை வழிபட்ட பின்னரே எதையும் செய்வார், குறிப்பாக போருக்கு புறப்பட்டுச் செல்லும் போது வராஹி அம்மனுக்கு வழிபாடுகள் நடத்திய பின்னர் தான் செல்வார்.. இதனால் வராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வம் ஆனாள்.

ஆனி மாத அமாவாசைக்குப் பின் வரும் 10 நாட்களும் அஷாட நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அப்போது வராஹிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பூமியில் விளையும் பொருட்களை கொண்டு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி. சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், பிரம்மன், திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள்.

இவர்களில் வராஹி பன்றி முகமும் பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். கருப்பு நிற ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பார்.

தமிழர்களின் ஆதி தெய்வமாக விளங்கிய வராஹி அம்மனை வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். இந்த ஆதி தெய்வம் ஞானத்தின் கருப் பொருளாகவும் விளங்குகிறது. ஸ்ரீசக்கரத்தில் நான்கு மூலைகளிலும் சேனாதிபதியாக நிற்கின்றாள் வராஹி அன்னை. அகத்திய மாமுனிவர் வராஹி அன்னையின் அருளை ஸ்ரீசக்கரத்தின் வாயிலாக தெரிவிக்கின்றார்.

ஆஷாட நவராத்திரியில் வராஹி தேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமுகமாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குழந்தை வரம், கல்வியில் தேர்ச்சி, பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்க நினைத்த காரியம் கைகூடி வெற்றி பெற மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.