துளசியால் அர்ச்சனை செய்யப்படும் சிவபெருமான்? ஒரே ஒரு ஆச்சர்ய கோயில் இது!

உலகம் சமநிலை அடைய உலக நாதனாகிய சிவபெருமான் குறுமுனியான அகத்தியரை தென்திசை நோக்கி அனுப்பினார்.


அவர் தான் நினைக்கின்ற பொழுதெல்லாம் தங்களின் திருமணக்கோலத்தைக் காண வேண்டும் என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டு, தெற்கே வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 சிவலிங்கங்களில் குளத்தூர் எனும் தலத்தில் உள்ள லிங்கமும் ஒன்று.

அகத்தியர் கைலாயத்திலிருந்து இங்கு வந்தபோது எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்திருந்தன. வழிபாட்டுக்குரிய நேரமானதால் சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கும் வில்வ மரம் காணப்படவில்லை. எனவே துளசியையே இறைவனுக்குச் சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை செய்தார். சிவபெருமான் தலையை சற்று சாய்த்த அவரது பூஜையை ஏற்றுக் கொண்டு சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார்.

சிறிய ஆலயம். நந்தியை அடுத்து கருவறையில் கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியராக இறைவன் எழுந்தருளியுள்ளார். துளசியை விரும்பி ஏற்றுக் கொண்ட இறைவன் துளசீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அருகிலேயே தெற்கு நோக்கி அம்பாள் வில்வநாயகி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும் துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம், இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் என்கின்றனர்.

இங்கு அருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. துளசீஸ்வரரை திங்கட்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்து இருந்தாலும், சந்திர தோஷம் இருந்தாலும் திங்கட்கிழமைகளில் சந்திர ஹோரையில் இந்த ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகும்.

பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.

இந்த திருக்கோவில் விக்கிரம சோழன் காலத்தில் அதாவது, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தல வரலாறு குறிப்பு கூறுகின்றது. இந்த ஆலயத்தில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு சிலை உள்ளது. வழிபாடு நடைபெறுகிறது.

மகாசிவராத்திரி அன்று இரவு நான்குகால பூஜை, அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறுகிறது மூன்றாம் காலபூஜையின் போது மகாவிஷ்ணு வழிபாடு செய்வதாக ஐதீகம். அவ்வமயம் சிவபெருமானுக்கு இதரமாலைகளுடன் துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது. உதிறி துளசியில் அர்ச்சனையும் செய்யப்படும்.

பிரகாரத்தில் பிடாரி அம்மன் என்கிற கல்யாண துர்க்கை சன்னதி உள்ளது. இவளும் ஆற்றல் வாய்ந்தவள். திருமணத்தடை விலக, வழக்குகளில் வெற்றி பெற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, நோய்கள் நீங்க அருட் பலன்களை அள்ளித் தருகின்ற வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.

இங்கு அகத்தியருக்கு இறைவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்ததால் கணவன் மனைவி உறவு பலப்படுத்தப்படும் தலமாகத் திகழ்கிறது.