மகள் சடலத்துடன் குடும்பம் நடத்திய தாய்! தந்தை! அதிர வைக்கும் காரணம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறந்து போன மகளின் உடலுடன் சில மாதங்கள் வாழ்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மிர்சாப்பூரைச் சேர்ந்தவர் திலாவர் சித்திக்கி. ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவரது வீட்டில் இருந்து சகிக்க முடியாத அளவுக்கு பிண நாற்றத்தை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் அங்குவந்த போலீசார் திலாவரின் வீட்டில் நுழைந்து பார்த்த போது படுக்கையறையில் அவரது மகளின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீசார் திலவரிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன்பே திலாவரின் வீட்டில்  பிண நாற்றம் அடித்ததாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்த நிலையில் போலீசார் திலாவரிடம் விசாரித்தபோது அவர் தங்கள் வீட்டில் அசம்பாவிதமாக ஏதும் நடக்கவில்லை என்றும் தனது மகள் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். 

இந்நிலையில் மக்கள் மீண்டும் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டுக்குள்ளேயே நுழைந்ததையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திலாவரும், அவரது மனைவியும் சில மாதங்களாக யாரிடமும் பேசுவதில்லை என்றும், ஒதுங்கியே இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறும் நிலையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.