இன்று தொடங்கிய மார்கழியை வரவேற்போம்! மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணபகவான் சொன்னதன் அர்த்தம் இதுதான்!

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும்.


இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.

இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.

மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

பாவை நோன்பு : மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்படுகின்றது. பாவை நோன்பு காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

திருவெம்பாவை நோன்பு : திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் : மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார் என்பது ஐதீகம். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவங்கள் விலகும். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைபிடித்த பலன் கிடைக்கும்.

திருவாதிரை நோன்பு : திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் இருக்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இவ்விரதத்தை கடைபிடிப்போர் திருவாதிரை தினத்தில் உபவாசம் இருந்து மறுநாள் பாரயணம் செய்வார்கள். இந்நாளில் பெண்கள் மாங்கல்ய பலனுக்காக நோன்பு இருப்பார்கள். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்ய சரடு மாற்றிக் கொள்வார்கள்.

அனுமன் ஜெயந்தி: மார்கழி மாதத்தின் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனும ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அனும ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.