இன்று கார்த்திகை பெளர்ணமி. திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக்கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தரும் என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் கோவில்.


கார்த்திகை மாத பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை பௌர்ணமி தினத்தில் 'திருவண்ணாமலை" அருணாச்சல மலையை, கிரிவலம் வந்து அண்ணாமலை - உண்ணாமுலை அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட்டு இறுதியில் முக்தி என்பது நிச்சயம். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவதை பழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதுகின்றனா;. லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுகிறது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசான்யலிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகளும் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும், முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் ஆகும். மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும். ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது நமசிவாய, சிவாயநம அல்லது தேவாரம், திருவாசகம் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும். அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்துக்கொண்டோ செல்லக்கூடாது.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், பெருத்த செல்வமும் கிடைக்கும். இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கத்தை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம். நான்காவதாக உள்ள லிங்கம் நிருதிலிங்கம். இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சனைகளின்றி வாழலாம். ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருணலிங்கம். சமூகத்தில் முன்னேற்றமடையவும், கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஆறாவதாக உள்ள லிங்கம் வாயுலிங்கம். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம். ஏழாவது லிங்கம் குபேரலிங்கம். பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும். கடைசி லிங்கம் ஈசானியலிங்கம். இந்த லிங்கத்தை வழிப்பட்டால் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

'அருணாசலத்தை வலம் வருகிறேன்" என்று சொன்னாலே பாவங்கள் தீரும். 'வலம் வர வேண்டும்" என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும். மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.