இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா?

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை


உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

ஆனால் உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் குணத்திற்க்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் அவன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு. மனதிற்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.

பாவத்தின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன். அந்த பாவத்தை சரி பண்ணவே மனித பிறவி. அவன் சொந்த கடனை அடைப்பதே அவனுக்கு திண்டாட்டம். இதில் தாவர உயிரினங்களுக்கு பாவ கணக்கு குறைவு. மாமிச உயிரினங்களுக்கு பாவ கணக்கு அதிகம். எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும். அம்மாவை தேடி அலையும் குஞ்சுகள் குட்டிகள். ஆனால் அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணரவேண்டியது தாயின் மனம், அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான். அந்த பாவத்தையும் சேர்த்து அடைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம். இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ? சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே. ஏனெனில் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்கப்படுவதில்லை.

காட்டில் கூட ஆடு, மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை. புலி, சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது. சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.. உடலால் மனித பிறவி சைவம். உயிரால் மனித பிறவி சைவம். .குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

ஆடு, மாடு, மான், யானை போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம். மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்குச் சிறந்தது சைவம் என வழிகாட்டிச் சென்றார்கள்.