பாம்புகளின் தலைவியான வாசுகியை தரிசிக்க ஆசையா? நீங்கள் செல்லவேண்டிய கோயில் இதுதான்!

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள சுல்லியா வட்டத்தில், குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.


இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகங் களும் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றன. புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்ரமணியசுவாமியை புகலிடமாகக் கொண்டுள்ளனர்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில், அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா நதியில் புனித நீராடிவிட்டு குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

மேலும் கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, அந்தத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள கருடனை வழிபட்டால், சர்ப்பங்கள் வெளிவிடும் விஷக்காற்றால் எந்த ஆபத்தும் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை. டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூசை செய்யும் நம்பூதிரிகள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

புராணக்கதைப்படி, சுப்ரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்ற பின்பு, சுப்ரமணியசுவாமி, தன் அண்ணன் கணபதி மற்றும் மற்றவர்களுடன், இக்குமாரமலையில் தங்கினார். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்ரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை, சுப்ரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற, சுப்ர மணியசுவாமி தேவசேனாவை மணந்தார்.

இத்தேவ திருமணம், குமாரமலையில் நடந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி, தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனாவுடன் சுப்ரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், குமாரதார ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பாகும். குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாகதோஷ நிவர்த்தி பரிகார பூஜை சிறப்பான ஒன்று. மேலும் ஆயில்யம் நட்சத்திர நாளில் செய்யப்படும் நாகதோஷ நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி போன்ற திருவிழாக்கள் இத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகின்றன.