வெள்ளிக்கிழமை என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா? ஆன்மிக பட்டியல் இதோ!

வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வீட்டில் மங்களம் நிலைத்திருக்க என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை : பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 - 5 மணிக்குள் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது. பூஜையறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம். பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவிதான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சாமிக்கு இலையில் வைத்துதான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது நமக்கு எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுப்பது நமக்கு சுபிட்சத்தைக் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை: வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது. பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது.

காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி வெட்டக்கூடாது. பூஜையின்போது, விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. துண்டைக் கட்டிக்கொண்டோ, துண்டை தோளில் போட்டுக்கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக்கூடாது.

தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது. இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது. நிவேதனம் செய்த தேங்காயைச் சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.