டீன் ஏஜ் பிள்ளை எதிர்த்துப் பேசுகிறதா? எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?

அம்மா, அப்பா சொன்னதை வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை பருவம் முடிவுக்கு வந்தவும், பிள்ளைகள் குணம் அப்படியே மாறிவிடும். பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.


அப்பா அம்மாவை எதிர்த்துப்பேசாத பிள்ளையாக இருந்தவர்கள், இந்த வயதுக்குப் பிறகுதான் எதிர்த்து பேசத் தொடங்குகிறார்கள். ’எல்லாம் எனக்குத் தெரியும்... நீங்க எதுவும் சொல்லவேண்டாம்என்று சொல்லாத ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் இந்த உலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பெற்றோரை எதிர்த்து நிற்கும் அளவுக்கு துணிச்சலும் தைரியமும் ஏற்படக் காரணம் ரத்தத்தில் உருவாகும் எக்கச்சக்கமான ஹார்மோன்கள்தான்.


இந்த ஹார்மோன்கள்தான் பிள்ளைகளை டென்ஷனாகவும், எரிச்சலாக்கவும் செய்கின்றன. இவர்களை எந்த நேரமும் துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டு, டீன் ஏஜ் வயதினரின் கோபத்தை சகித்துக்கொள்ளும் மனப்பான்மை பெற்றோர்களுக்கு இருக்கவேண்டும். அப்படி இருந்துவிட்டால், எந்த வீட்டிலும் பிரச்னைகள் ஏற்படாது. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன தெரியுமா?

பிள்ளைகள் எதிர்த்துப் பேசியதும் பெற்றோர்கள் தாங்கமுடியாமல் கொதிக்கிறார்கள். இந்த பிள்ளைக்காக நாங்க என்னவெல்லாம் செஞ்சோம்.


 எங்களையே எதிர்த்துப் பேசிட்டாளேஎன்று நொந்துபோகிறார்கள். சண்டைக்குப் போகிறார்கள், அடித்து விரட்டுகிறார்கள். அதனால் இளையவர்கள் இன்னமும் மூர்க்கமாகிறார்கள்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பதை இந்த விஷயத்தில்தான் பெற்றோர்கள் கடைபிடிக்கவேண்டும். இளரத்தத்தின் சலசலப்பை சகித்துக்கொள்ளவும், பக்குவமாய் புரிந்துகொள்ளவும் பெற்றோர் முன்வரவேண்டும்., தோழமையுடன் பொறுமையாய் இவர்களைக் கையாண்டால்தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும்போது, அதனை பெற்றோர்கள் திறம்பட சமாளிக்கவேண்டுமே தவிர, சண்டைக் கோழி மாதிரி சிலிர்த்துக்கொண்டு நிற்கக்கூடாது.



பதின் ருவத்தினருக்கு திடீர் கோம், திடீர் அழுகை, திடீர் எரிச்சல் போன்றவை ஏற்படுவதும் சகஜம்தான். இந்த வயதில் ஏற்படும். என்னைக் கண்டாலே யாருக்கு பிடிக்கலை’, ‘’என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க! என்று புலம்புவார்கள்.  அதேபோல் ஆக்ரோஷமும் அதிகம் வரும். உடல் பலம் அதிகரித்து விடுவதால் எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். இவை அனைத்தையும் அன்பொழுகப் பேசுவதும், அட்ஜெஸ்ட் செய்துகொள்வதன் மூலமும்தான் சமாளிக்கமுடியும்.

 

மேலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மற்றும் மூன்றாம் மனிதர்களிடம் பேசுவதற்கு கூச்சப்பட்டு டீன் ஏஜ் வயதினர் விலகித்தான் போவார்கள். இதற்கு முக்கியக் காரணம், உடல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான். புதிதாக பார்ப்பவர்கள், ‘அடேங்கப்பா... இத்தனை பெரிசா வளர்ந்துட்டான் என்று பாராட்டாக சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இந்தக் கூச்சம் தானாகவே சரியாகிவிடும் என்பதால், இவர்களை வலுக்கட்டாயமாக விருந்தினர்கள் முன்பு நிற்கவைப்பது சரியல்ல.


தன்னுடைய உடல் பற்றிய மாற்றங்களைப் புரிந்துகொண்டு, இதெல்லாம் இயல்பான மாற்றம்தான் என்ற உணர்வு ஏற்பட்டதும் டீன் ஏஜ் வயதினருக்கு தன்னம்பிக்கை வந்துவிடும். அதன்பிறகு அனைவரிடமும் சகஜமாக பழகத் தொடங்குவார்கள். அதுவரை பெற்றோர்கள் அமைதியாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, இழுத்துவைத்து சண்டை போடக்கூடாது.