அன்னதானத்தின் மகிமையைச் சொன்ன ஸ்ரீசாயி பாபா, அப்படி பிறருக்குப் பகிர்ந்து கொடுக்காமல் தானே சாப்பிட்டால் என்னவாகும் என்பதையும் விளக்கியிருக்கிறார். அதற்கு உதாரணமாக இதிகாசத்தைக் காட்டுகிறார்.
உணவு தானம் செய்யவில்லை என்றால் என்னவாகும்? ஸ்ரீசாயிபாபா காட்டும் உதாரணம் தெரியுமா?
கண்ணனும் சொன்னதையே ஸ்ரீசாயி சொல்கிறார். ஆம், கிருஷ்ணபகவான் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்”” என்கிறார். இதற்கு உதாரணமாக சுதாமரின் வாழ்க்கையைச் சொல்லலாம்.
குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் சுதாமரும், கிருஷ்ணரும் ஒன்றாகவே கல்வி பயின்றனர். காட்டுக்குள் விறகு எடுக்கச் செல்கின்றனர். குரு பத்தினி கொடுத்த கடலைகளை, கிருஷ்ணருடன் பகிர்ந்துகொள்ளாமல் தானே தனித்து சாப்பிட்டு விடுகிறார் சுதாமர். சிறு பங்கையாவது வாங்கி சாப்பிட்டுவிட்டால், சுதாமருக்கு துன்பம் நேராது என்பதால், கொஞ்சமாவது குடுக்குமாறு கிருஷ்ணர் கேட்கிறார். ஆனால், தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு, தான் மட்டுமே சாப்பிட்டு விடுகிறார்.
அந்த பாபத்தினால்தான் அடுத்த 10 ஆண்டுகள் வறுமையில் வாழவேண்டிய நிலை சுதாமருக்கு ஏற்பட்டது. சுதாமரின் மனைவி கொடுத்தனுப்பிய அவல் மூலம் ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்ம பசியை அடக்கியபிறகே, சுதாமர் வாழ்க்கை செல்வத்தால் நிரம்பியது. சிறிய அளவு அவல் கொடுத்ததன் காரணமாக சுதாமருக்கு பொன்னாலான நகரமே கிடைத்தது. அதனால்தான் பாபாவும் அன்னதானம் செய்து, உலக உயிர்களை பசியின் கொடுமையில் இருந்து காப்பாற்ற விளைகிறார்.