காணும் பொங்கலுக்கு என்ன சிறப்பு..? திருமணம் கைகூடி வரும் பண்டிகை இது.

பொங்கல் பண்டிகை உலக மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலை எப்படி கொண்டாடுவது? அன்றைய நாளில் என்னென்ன செய்வார்கள்? என்பதை பற்றி பார்ப்போம்.


காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பார்கள். இந்நாளில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நடத்துவதுண்டு. குறிப்பாக ஜல்லிக்கட்டு, பட்டிமன்றம், உரி அடித்தல், வழுக்குமரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகள் இடம்பெறும்.

பெண்களுக்கு :பெண்கள், பொங்கல் வைக்கும்போது பானையில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசிப்பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

கன்னிப் பொங்கல் :இது கல்யாணம் ஆகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் உரியது. ஆகையால் இது கன்னிப் பொங்கல் என அழைக்கப்படுகிறது. கல்யாணம் ஆகாத இளம்வயது பெண்கள் எல்லோரும், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பூலங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவார்கள். ஒவ்வொருவர் தாம்பூலத்திலும் கரும்புத்துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும். எல்லோரும் கும்மியடித்துப் பாடல்களைப் பாடியப்படியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை (ஏதாவது ஒன்றை) நோக்கிச் செல்வார்கள். அங்கு கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

கன்றுப் பொங்கல் :பொங்கலின் சிறப்பே, தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு தான். ஜல்லிக்கட்டு போட்டியில் ஆண்மகன்கள் காளையை அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவார்கள். காளையைக் கன்று என்று கூறுவதும் உண்டு. இதை முன்னிட்டுதான் இந்நாள் கன்றுப் பொங்கல் எனக் கூறப்படுகிறது.

கணுப்பிடி :கணுப்பிடி என்பது இந்நாளின் சிறப்பு. இது உடன்பிறந்த சகோதரர்கள் நலமும், வளமுமாய் வாழ சகோதரிகள்ஃபெண்கள் செய்யும் நோன்பாகும். இரண்டு வாழை இலைகளை கிழக்கு முகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல் நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி தூவி, மஞ்சள் சாதம் கொஞ்சமும், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சமும், வெள்ளையாய் பால் சாதம் கொஞ்சமும், வெல்லம் சேர்த்த சர்க்கரைப் பொங்கல் கொஞ்சமும், தயிர் சேர்த்த தயிர்சாதம் கொஞ்சமும் என ஐந்து வகை அன்னங்களை தயாரித்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றிலும் 5 அல்லது 7 பிடி எடுத்து இலையின்மீது வரிசையாய் வைக்கும்போது, காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும் என்று சொல்லிக்கொண்டே வைக்க வேண்டும். பின்பு தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும். இந்நாளில், உடன்பிறந்தவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்வார்கள்.

மொத்தத்தில் காணும் பொங்கல் என்பது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.