சசிகலா சொத்துக்கும் ஆபத்து வந்தாச்சு.... சட்டரீதியில் அரசுடமை நடவடிக்கை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இந்த விஷயத்தில் சசிகலாவின் சொத்துக்கள் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று பலரும் கவலை தெரிவித்தனர்.


இந்தநிலையில்தான், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை அரசுடமையாக்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் ஆயிரம்விளக்கு வாலஸ்கார்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள், ராம் நகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள கட்டிடங்களை சென்னை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு சொந்தமாக்கி அறிவித்தது.

மறுநாள், காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை பகுதிகளில் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள சுமார் 141.75 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து அரசுடமையாக்கியது. இதன் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் மற்றும் தஞ்சாவூரில் 26,740 சதுர அடி பரப்பளவு கொண்ட 3 காலிமனைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1050 ஏக்கர் நிலங்கள் ஆகியவற்றையும் மாவட்ட நிர்வாகம் அரசுடைமையாக்கி அறிவித்தது. 

இந்த சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கப்படாதது சர்ச்சை எழுந்தது.  

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு நேற்று அதிரடியாக அரசுடமையாக்கியது. திருவாரூர் அருகே வண்டாம்பாளையத்தில் 34 ஏக்கர் 24 சென்ட் பரப்பளவில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த மாடர்ன் ரைஸ் மில் கடந்த 1995ம் ஆண்டில் சசிகலா மூலம் வாங்கப்பட்டது.

இந்த ரைஸ்மில்லில் இளவரசி, சுதாகரன் மற்றும் பலர் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். தற்போது ரூ.300 கோடி மதிப்பிலான இந்த மாடன் ரைஸ் மில் கட்டிடம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் காலி இடங்கள் என அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதாகவும், இனி இந்த சொத்திலிருந்து பெறப்படும் வாடகை வருவாய் உள்ளிட்ட அனைத்தும் அரசுக்கு பாத்தியப்பட்டது எனவும் கலெக்டர் சாந்தா நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் அ.மு.மு.க.வினரை கலங்க வைத்திருக்கிறது.