சசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை, தினகரன் தனி மரம்..! அத்தனை வதந்திகளுக்கும் எடப்பாடியார் நெத்தியடி பதில்.

தமிழகத்தில் உருப்படியாக எந்த அடித்தளமும் இல்லாத பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்வதைக் காரணம் காட்டி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது குழப்பத்தை விளைவித்து உள்ளே புகுந்துவிட வேண்டும் என பல்வேறு விஷயங்களை செய்துவருகிறது.


அதனால், தி.மு.க.வை ஜெயிக்க வேண்டும் என்றால் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை அ.தி.மு.கவுடன் சேர்க்க வேண்டும் என்றும், சிறையில் இருந்து சசிகலா வந்தவுடன் அவருக்கும் கட்சியில் ஒரு பதவி கொடுக்க வேண்டும் என்றும் திட்டம் தீட்டுவதாக சொல்லப்பட்டு வந்தது.

இவை எல்லாமே உண்மையல்ல என்று இன்று டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பி.ஜே.பி யின் மூத்த தலைவருமான அமீத் ஷாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு இன்று காலை பிரதமர் மோடியுடன் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு செய்திaயாளர்களை சந்தித்து வெளிப்படையாகப் பேசினார் எடப்பாடி.. 

அப்போது, தினகரன் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் டிடிவி.தினகரன். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார். டி.டிவி. தினகரன் அ.தி.மு.க. கட்சியிலே கிடையாது. அவர் தொடங்கிய அ.ம.மு.க.வில் இருந்து அனைவரும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டார்கள். தினகரன் மட்டும் தனி மரமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் சசிகலாவை அ.தி.மு.கவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார். பா.ஜ.க. இணைப்பு முயற்சி மேற்கொண்டதா என்று கேள்வி எழுப்பப்பட்ட நேரத்த்ல், அப்படியொன்று நடக்கவே இல்லை என்றார்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். ஆக, இதுவரை நிலவிவந்த சசிகலா விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இப்போதுதான் அ.தி.மு.க.வினர் சந்தோஷம் அடைந்துள்ளனர். அதேநேரம், அ.ம.மு.க.வினர் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.