நடத்தையில் சந்தேகம்! 3வது மனைவியின் தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

3வது மனைவியின் மீதான சந்தேகத்தால் அவர் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.


சேலம் ஆத்தூரை அடுத்த பெத்தாம் பட்டியை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு 65 வயதாகிறது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து அந்த மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்தவர் சிங்காரம். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரம் சுமதி எனும் பெண்ணை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

சிங்காரம் – சுமதி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். மூன்று பேரும் பெத்தாம் பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். சுமதி தனது தோட்டத்தில் உள்ள மாட்டில் பால் கறந்து அதனை விற்கும் தொழில் செய்து வந்தார்.

இதனால் தொழில் நிமித்தமாக பல்வேறு ஆண்களுடன் சுமதி பேச வேண்டிய நிலை இருந்தது. சிங்காரம் – சுமதி இடையே வயது வித்தியாசம் அதிகம். இதனால் சிங்காரத்திற்கு சுமதி மீது சந்தேகம் இருந்துள்ளது. அதனால் பால் தொழில் செய்ய வேண்டாம் என்று சிங்காரம் கூறி வந்துள்ளார்.

ஆனால் குடும்ப சூழல் காரணமாக சுமதி தொடர்ந்து அந்த வியாபாரத்தை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிங்காரம் இன்று காலை சுமதி பால் கறந்து கொண்டிருந்த போது பின் பக்கமாக சென்று சம்மட்டியை வைத்து தலையில் ஓங்கி ஒரு அடி அடித்துள்ளார்.

இதனால் நிலை குலைந்து கீழே விழுந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனை பார்த்து பயந்து போன சிங்காரம் மனைவி சடலத்தை அப்படியே போட்டுவிட்டு தப்பியுள்ளார். தப்பி ஓடிய சிங்காரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.