விஜயதசமியின் கதை இதுதான்! நவராத்திரி கடைசி நாள் சிறப்புகள்

சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம்.


ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா? இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.

இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன்.

தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர். தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை. அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.

வித்தியாரம்பம் வைபவம் இன்றைய தினத்திலேயே வருகிறது. கல்வியைத் தொடங்கப் போகும் பிள்ளைகளுக்கு ‘ஏடு தொடக்குதல்’ இன்றைய தினத்தின் விசேட அம்சமாகும்.அக்காலத்தில் கிராமத்தில் உள்ள ஆசான்கள் அல்லது கற்றறிந்த பெரியவர்கள் ஏடு தொடக்குதலை மேற்கொள்வர். தட்டு ஒன்றில் அரிசியைப் பரப்பி முதன் முதலில் ‘அ’ எழுத்தை குழந்தையைக் கொண்டு எழுத வைப்பதே ஏடு தொடக்குதல் ஆகும். ஆசான் அல்லது பெரியவர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எழுத்தை எழுத வைப்பார். இதுவே இன்றைய விஜயதசமியின் சிறப்பான வித்தியாரம்பம்நிகழ்வாகும்.

மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.