ஐயப்பனுக்கு தர்மசாஸ்தா என்ற பெயர் ஏன்? கீதை தத்துவம்!

புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான் ஐயப்பன்.


மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவனும் ஐயப்பன்தான். மற்ற கடவுளுக்கு மாலை போடும் பக்தர்களை விட, ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் ஐயப்பனுக்கு, ஐயப்பன், தர்மசாஸ்தா என்ற பெயர் இருக்கிறது? அதற்கு பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில், கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால் மணிகண்டன் என்ற திருப் பெயர் அவருக்கு உண்டு.

ஆனால், ஐயப்பன் என்ற பெயர் வந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு. சாஸ்தாவுக்கு ஐயன் என்று பிரசித்திப் பெற்ற பெயர் உண்டு. திருமந்திரம் போன்ற பண்டைய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஐயன் என்பதற்கு, `மிக உயர்ந்தவர்' என்று பொருள். இந்த ஐயன் வார்த்தைக்குப் பின்னால் `ஆர்' என்கிற பதத்தைச் சேர்த்து (ஐயன் + ஆர்) ஐயனார் என்று தமிழ்நாட்டிலும், `அப்பன்' என்ற பதத்தைச் சேர்த்து (ஐயன் + அப்பன்) ஐயப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.

சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர் மேலும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப்பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளையிட்டவர். வீரபத்ரரை தக்ஷ சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார்.

ஹரிஹர புத்திரனை தர்மசாஸ்தா என்று அழைக்கப்படக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மம் சர (அறத்தைச் செய்) என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.

ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்றும், இந்த தர்மத்தால்தான் இன்று அகிலம் தழைத்து நிற்கிறது என்றும் கூறுவார்.

ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல் இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது. நாளடைவில் இந்த தர்மம் அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.