இன்றும் நமது குடும்பங்களில் எந்த நல்ல விஷயங்கள் நடந்தாலும் மொய் எழுதும் பழக்கம் உண்டு.
மொய் பணம் ஒற்றைப்படையில் வைப்பதற்கு காரணம் இதுதான்!

அவ்வாறு வைக்கும் மொய்யில் பொதுவாக 101, 501, 1001, 2001 என்று ஒற்றைப்படை விதத்தில் தான் மொய் வைப்பார்கள். எதற்கு இந்த 1 ருபாயை மொய்யுடன் சேர்த்து வைக்கிறார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு சாஸ்திர ரீதியாகவும் எந்த ஒரு காரணமும் இல்லை. ஆனால், இதிலும் ஒரு உண்மையை நம் பெரியோர்கள் மறைத்து வைத்து உள்ளார்கள். அது என்ன என்பதை பார்ப்போம்.
பொதுவாக, இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுத்து விடலாம். அப்படி வகுத்தால் இறுதியில் பூஜ்ஜியமோ அல்லது முழு எண் தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் கண்டிப்பாக பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் புள்ளி கணக்கில் தான் விடை வரும். உதாரணமாக: 100/2=50 _ 101/2=50.5 மீதம் வருகிறதா?
இதன் அர்த்தம் இரட்டை படையில் மொய் வைக்கும் சமயத்தில், மொய் வைப்பவருக்கும், வாங்குபவர்க்கும் இடையே, உனக்கும் - எனக்கும் இனி மிச்சம், மீதி எதுவும் இல்லை. இத்துடன் நமக்குள் உறவு முடிந்து விட்டது என்பதை சொல்வதாக ஒரு பொருள் அதில் மறைந்து உள்ளது.
அதுவே ஒற்றைப்படையில் மொய் வைக்கும் போது, இத்துடன் உனக்கும், எனக்குமான உறவு இத்துடன் முடிந்து போய்விடவில்லை. நம்மிடையேயான உறவு இன்னும் மீதம் இருக்கிறது. இந்த பந்தம் ஆண்டாண்டுக்கு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை குறிக்கவே ஒற்றை படையில் மொய் வைக்கும் பழக்கம் உருவானது.
உறவுகள் விட்டுப்போகாமல் இருக்க நீங்களும் ஒற்றைப்படையில் மொய் வைக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள்.