சத்தியத்தை காப்பதற்காகவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மகா விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமாக பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம், அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திர நன்னாளில் பிறந்தார்.
குழந்தை கிருஷ்ணர் ஆலிலையில் படுத்திருக்கும் தத்துவம் என்ன தெரியுமா?

எத்தனை விதமான இலைகள் இருந்தும் கிருஷ்ணர் ஆலிலையில் படுத்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.
ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தௌpத்தால், அது இழந்த பச்சை நிறத்தை பெறும் சக்தி வாய்ந்தது.
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கின்றார். மனிதருக்கு ஒரு தத்துவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே கண்ணன் ஆலிலையில் படுத்திருக்கிறார்.
பக்தர்களே...!! நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். என்னைப் போலவே நீங்களும் குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற அலையால் தாக்கப்படமாட்டீர்கள். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப, துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்கிறார்.
வாழ்க்கையில் வரும் இன்ப, துன்பங்களை விளையாட்டாக எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். எதற்காகவும் கவலைப்பட்டுக் கொண்டு வருந்துவதில் பயன் ஒன்றுமில்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார்.