தீபச்சுடரில் முப்பெரும் தேவியரை தரிசிக்க ஆசையா? நெய்யில் விளக்கேற்ற வேண்டிய ஐதீகம் இதோ!

நாம் இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


நோய் தொற்றுகளை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை. இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம். அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். இந்த நேரமே பிரதோஷ வேளை ஆகும்.

நெய் அல்லது எண்ணெயை விளக்கில் பயன்படுத்தும்போது பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றி, பிறகு திரியை வைத்து ஏற்ற வேண்டும். குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

நாம் கோவிலுக்கு சென்று இறைவனிடம் நம் வேண்டுதல்களை வைப்பதோடு விளக்கேற்றியும் வழிபடுகிறோம். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இதனால் நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.

5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வியும், ஞானமும் பெறலாம்.

9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும்.

12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும்.

27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.

48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சத்தை முழுமையாக பெறலாம்.

நெய் விளக்கு ஏற்றிய பின்னர் கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.