30 நாட்களில் முதல்வராக ஆசைப்படும் ரஜினிகாந்துக்கு சீமான் எச்சரிக்கை..!

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அவருக்கு தன்னுடைய வரவேற்பையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் சீமான்.


ஐயா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிடுதென்று முடிவு செய்துவிட்டார். நாங்களும் களத்தில் சந்திப்போம் என்று முடிவுசெய்துவிட்டோம். ஆனால் இப்போது சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன், இத்தனை ஆண்டுகள் உங்கள் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த செயல்பாட்டாளர்களில் ஒருவருக்குக் கூடவா உங்கள் கட்சியை நிர்வகிக்கத் தகுதி இல்லை? அதில் ஒருவரை நீங்கள் ஏன் தேர்வு செய்யவில்லை? உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவர் கூடவா உங்களுக்கு ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. 

உங்கள் கட்சி தலைமை நிர்வாகிகளில் ஒருவர் அர்ஜுனமூர்த்திப் பா.ஜ.க, மற்றொருவர் தமிழருவி மணியன் காங்கிரஸ், இருவரையும் வைத்துக்கொண்டு எப்படி மாற்றம் கொண்டு வருவீர்?' அரசியலில் ரஜினியின் தேவை என்று என்ன இருக்கிறது? எந்தப் பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்திருக்கிறார்? எந்தப் பிரச்சனைக்காகப் போராடியிருக்கிறார்?

வேளாண் சட்டங்கள் குறித்து ரஜினியின் கருத்தென்ன? நீட் தேர்வு குறித்து அவரது நிலைப்பாடு என்ன? ரஜினியின் தேவை எங்கு உள்ளது? பாஜகவிற்குதான் ரஜினிகாந்தின் தேவை உள்ளது. 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல 30 நாட்களில் முதல்வராவது எப்படி என்று அவரது அரசியல் ஆசை உள்ளது. 

வேண்டுமென்றால் நாடு தழுவிய அவரது புகழைப் பயன்படுத்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வரட்டும். அம்மையார் ஜெயலலிதா, ஐயா கருணாநிதி இருக்கும் போதே நாங்கள் கட்சி தொடங்கி எதிர்த்து அரசியல் செய்தோம். அவர்கள் இருந்தபோது ஊழல் இலஞ்சம் இல்லையா? அன்றைக்கு மாற்றம் தேவைப்படவில்லையா?

அப்போது ஏன் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை? தற்போது பாஜகவின் அழுத்தம் காரணமாகக் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் என நான் உறுதியாக நினைக்கிறேன். மோடி ரஜினி எனும் புதிய முகமூடி அணிந்து வருகிறார் என்பதே உண்மை. கூட இருந்து யாரோ ரஜினிகாந்தைத் தூண்டிவிடுகிறார்கள். மொத்தமாகவே தமிழர்களை அறிவு கெட்ட கூட்டம் என நினைக்கிறார் ரஜினிகாந்த் என்று சீமான் தெரிவித்துள்ளார்.