தான் காணாமல் போய்விட்டதாகவும், தன்னை கடத்திவிட்டதாகவும் வெளியாகும் செய்திகள் அனைத்துமே பொய்யானவை என்று புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நான் காணாமல் போய்விட்டேனா? என்னை கடத்திவிட்டார்களா? புஷ்பவனம் குப்புசாமி மகள் வெளியிட்ட திடுக் தகவல்!

பிரபல கிராமிப் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி. இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பிபிஸ் படித்துள்ளார். மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அலுவலராகவும் பல்லவி பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பல்லவி மாயமாகிவிட்டதாக சென்னை ஆர்.ஏ புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தனது தங்கையுடன் நடைபெற்ற வாக்குவாதத்திற்கு பிறகு அவரை காணவில்லை என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்லவியை சிலர் கடத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பல்லவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் மாயமாகவில்லை என்றும் தனக்கு எதுவும் நிகழவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தன்னை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்றும் பல்லவி கூறியுள்ளார். ஆனால் அவர் தான் தற்போது எங்கு இருக்கிறேன் என்கிற தகவலை வெளியிடவில்லை. தான் முழுக்க முழுக்க நன்றாக இருப்பதாகவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே குடும்ப பிரச்சனை காரணமாக பல்லவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மட்டும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அது என்ன பிரச்சனை என போலீசார் விசாரித்து வருகின்றனர்.