தமிழ் இலக்கியம் கற்ற 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மொழிகளை கற்பித்தால் தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் நிலை நாட்ட முடியும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
100 மாணவர்களுக்கு உலக மொழிகளை கற்பிக்க வேண்டும்! வைரமுத்து கூறும் செம ஐடியா!

சென்னை அடையாறில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் வெள்ளிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வைரமுத்து கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின்போது பேசிய அவர் தமிழின் புகழ் உலக அளவில் வளர தமிழ் இலக்கியம் படித்த 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்பானிஷ், அரபு,இத்தாலி உள்படபல்வேறு உலக மொழிகளை கற்றுத்தருவதன் மூலம் உலகம் முழுவதும் தமிழின் பெருமையை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார்.
இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள பிறமொழி அறிஞர்கள் தமிழின் சிறப்பை அறியவில்லை என வேதனை தெரிவித்த வைரமுத்து தமிழ் மாணவர்கள் உலக மொழிகளை கற்பதற்கான முயற்சிகளை அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த பொருள்களை ஏற்றுமதி செய்வதுபோல் இந்தியாவின் புகழாரத்தை உயர்த்த திருக்குறளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் வைரமுத்து கூறினார்.
ஆங்கிலத்தை தாண்டி ஸ்பானிஷ் மொழி வளர்ந்து வருவதாகவும் அடுத்த நூற்றாண்டில் ஸ்பானிஷ் உலகை ஆளும் மொழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.