7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்

இந்தியாவின் இரண்டாவது அதிவேக தேஜஸ் ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு விரைவில் இயக்கப்படவுள்ளது.


அதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தேஜஸ் ரயிலானது ஏசி மற்றும் நவீன கழிப்பறை வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் வை பை , தானியங்கி கதவுகள் , ஜி பி எஸ் வசதிகள் உள்ளன. பயணிகளின் கண்களை கவரும் வகையில் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி இணைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சொகுசாக பயணம் செய்ய வசதியான இருக்கைகள், இருக்கையின் பின்புறம் வீடியோ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

லேப்டாப் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த ரயிலில் உள்ளன.

சென்னை மதுரைக்கு இடையேயான சுமார் 500 கி.மீ களை இந்த தேஜஸ் ரயிலானது 7 மணி நேரத்தில் சென்றடையும். இதனால் பயணிகளின் பயண நேரம் சுமார் 2 மணி நேரம் குறையும்.

இந்த தேஜஸ் ரயிலானது சென்னைக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 5 முறை இயக்கப்படவுள்ளது. காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது மதியம் 1 மணிக்கு மதுரை சென்றடையும்.

சதாப்தி ரயிலை விட தேஜஸ் ரயிலின் கட்டணம் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.