கடலில் உள்ள நவகிரக கோயில் - ராமர் உருவாக்கிய நவபாஷானக் கோயில்

தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன.


அதில் தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது. இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும் , இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது.

வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம்.

இங்கு ஏன் கடல் அலையை நிறுத்த வேண்டும்? ராமபிரான், உப்பூரில் வெயிலுகந்த விநாயகரை வேண்டிவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குக் கேட்கிறது. “சீதையை ராவணன் தூக்கிச் சென்றதற்கு நவக் கிரக தோஷம்தான் காரணம் என்றும், அது போவதற்கு, கடல் நடுவே மணலால் நவக் கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!’ என்றும் அந்த அசரீரி சொன்னதாம்.

அதனால், ராமபிரானும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம் அப்போது, ஸ்ரீமந் நாராயணனை வேண்டிக் கொள்ள, மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறின. ராமனின் வேண்டுகோளால் கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்துவிடுகின்றன. இதனாலேயே, தேவிப்பட்டினம் நவபாஷனம் என்றும், கடலுக்குள் நவக்கிரக சந்நிதி அமையப் பெற்றது என்பதும் சிறப்புக்குரியதாக ஆனது. இந்த இடத்தில், ஆதி ஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ள சந்நிதி, கடலடைத்த பெருமாள் சந்நிதி என்ற பெயருடன் அழகாகத் திகழ்கிறது.

திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷ நிவர்த்தி என தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நவக்கிரக சந்நிதி நோக்கி வந்து கொண்டேயுள்ளனர்.

நவகிரக தோஷம் மட்டுமல்லாது, ராமபிரான் சனியின் பாதிப்பில் இருந்தும் விடுபட்டார் என்று ஒரு புராணக் கதையும் இங்கே உண்டு. இங்கே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். சிவபெருமான் திலகேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி செளந்தரநாயகியாகவும் காட்சி தருகின்றனர்.

இந்த நவகிரக சந்நிதிக்கு, நவபாஷனக் கோவில் என்று ஒரு பெயரும் உள்ளது. பாஷனம் என்றால் கல். நவ தானியங்களைக் கொண்டு இந்தக் கற்களுக்கு பூஜைகள் செய்யப் படுகின்றன. அமாவாசை நாட்களில் ஏராளமானோர் இங்கே குவிகின்றனர். மூதாதையரை வழிபட்டு, சாப விமோசனம் அடைகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.