நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது..! டிடிவி. தினகரன் வேதனை

துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும், என் அருமை நண்பருமான வெற்றிவேல் அவர்கள் நம்மை எல்லாம் கலங்கவைத்து, சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு உங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது என்று டிடிவி. தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.


20 ஆண்டுகளுக்கு முன் மதிப்புக்குரிய ஜி.கே.மூப்பனார் அவர்களால் அறிமுகமான வெற்றிவேலுக்கும் எனக்குமான நட்பு, நம்மோடு அவர் இணைந்து பயணிக்கத் தொடங்கிய பிறகு இன்னும் நெருக்கமானது. மூப்பனார் அவர்களின் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் வெற்றிவேலை அறிமுகப்படுத்தி வைத்த அந்த மணித்துளிகள் இப்போதும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன. அதன்பின்னர் அம்மா அவர்களின் பேரன்புக்கு பாத்திரமானவராக வெற்றி திகழ்ந்தார். 

அம்மா அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஏதுவாக 2015ல் தமது எம்.எல்.ஏ பதவியைத் துறந்தார். அந்தத்தொகுதியில் அம்மா அவர்கள் வாகை சூடுவதற்கு உழைத்த தொண்டர் படையின் தளகர்த்தராக நின்று எந்த மனத்தயக்கமும் இல்லாமல் வெற்றி பணியாற்றினார். அதுதான் வெற்றிவேல் எனும் விசுவாசத்தின் போற்றுதலுக்குரிய குணம்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, தலைமைக்காக எத்தனை துயர் வந்தாலும் இம்மியளவும் பிசகாமல் விசுவாசத்தின் இமயமாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்வதே ஒரு லட்சியவாதியின் அடையாளம். அப்படியோர் அசைக்கமுடியாத அடையாளமாக நம் கண்ணெதிரே திகழ்ந்தவர் வெற்றிவேல். ஆமாம்… வெற்றிவேல் என்றால் விசுவாசம். விசுவாசம் என்றால் வெற்றிவேல். அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதே மாறாத அன்பையும் அளவிட முடியாத பாசத்தையும் தியாகத்தலைவி சின்னம்மா மீதும், என் மீதும் காட்டினார். 

அதுவரை தமிழக வரலாறு பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் அத்தனை முனைகளின் வழியாகவும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு முழுமுதற்காரணமே என் அருமை நண்பர் வெற்றிதான்! அச்சுறுத்தல்கள் நிறைந்த அந்த இடைத்தேர்தல் களத்தில் சூறாவளியாக சுற்றிச் சுழன்று வெற்றி ஆற்றிய பணிகளை என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. அதன்பிறகு தாம் மறையும் வரை என்னுடைய பிரதிநிதியாக நின்று ஆர்.கே.நகரில் மக்கள் பணிகளை மேற்கொண்டவரும் அவர்தான்.

வெற்றிவேல் நினைத்திருந்தால் ‘அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போல’ ஆதாயம் இருக்குமிடம் தேடி பறந்திருக்கலாம். ஆனால் ‘தனிப்பட்ட பலன்களைவிட, இயக்கமே பெரிது’ என்றெண்ணி இறுதிவரை ஏற்றுக்கொண்ட தலைமைக்கு பக்கபலமாக வேலாகவும், வாளாகவும் களத்தில் நின்றார். சூதுமதியாளர்களின் துரோகத்தால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோன போதும் அதைப்பற்றி கவலைப்படாமல், முன்பைவிட இன்னும் வேகமாக இயக்கப் பணியாற்றியவர். எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் ‘நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பேன்’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன பெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வெற்றிவேல்!

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்குப் பிறகு எத்தர்களும், உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த துரோகிகளும் தியாகத்தலைவி சின்னம்மாவின் மீது சுமத்திய அபாண்ட பழி துடைத்தெறியப்பட்டதில் வெற்றிவேலின் பங்கு முக்கியமானது. அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சிகளை அவர் வெளியிட்டதில் எனக்கே கூட உடன்பாடு இல்லை. ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என்று கேட்டபோது, ‘தோழியாக, தாயாக அம்மாவைப் பார்த்துக்கொண்ட சின்னம்மா மீது மனசாட்சியை விற்று தின்றவர்கள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; அதனால்தான் வீடியோவை வெளியிட்டேன்’ என்று பதில் சொன்னார். அந்த உண்மை வெளியானதும் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்த பிறகே, வெற்றிவேல் எனும் அப்பழுக்கில்லாத தளபதியின் ஆதங்கத்தில் இருந்த நியாயம் புரிந்தது. இப்படி இயக்கத்திற்காக, தலைமைக்காக சுயமாக முடிவெடுத்து சமரசங்கள் ஏதுமில்லாமல் செயல்படும் தீரமும், நெஞ்சுரமும் கொண்டவர் வெற்றி.

எதிர்காலத்தில் எதிரிகளும் துரோகிகளும் ஏற்படுத்துகிற இத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து தூள், தூளாக்கி வெற்றி பெறும் சக்தியை வெற்றி போன்றவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்த உணர்வு மாறாமல், லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும், வேகத்தோடும் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுவதே வெற்றிவேலுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.