இன்று தே.மு.தி.க. தலைமையகத்தில் இருந்து பிரேமலதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயன அறிவிப்பு வெளியானது.
விஜயகாந்த் பிரசாரம் எப்போ? பிரேமலதாவிடம் டென்ஷனான மணி அமைச்சர்!

அதன்படி திருப்பூர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதியில் வரும் 27ம் தேதியன்று தேர்தல் பிரசாரம் தொடங்கும் பிரேமலதா, ஏப்ரல் 16ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைக் கண்டு ஆனந்தப்படவேண்டிய அ.தி.மு.க.வினர் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, நிச்சயம் அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம்.
அதனை ஏற்றுக்கொண்ட பிறகே ஒப்பந்தம் கையெழுத்து ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது விஜயகாந்த் சுற்றுப்பயணம் குறித்து தகவல் இல்லாமல், பிரேமலதா சுற்றுப்பயணம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் வரவில்லை என்றால் எதற்காக கூட்டணி, இப்போதே விஜயகாந்தை கூட்டிக்கொண்டு கிளம்பவேண்டும் என்று மணியான அமைச்சர் ஒருவர் பிரேமலதாவிடம் டென்ஷன் ஆனாராம்.
ஆனால், ‘விஜயகாந்த் உடல் இன்னும் சில நாட்களில் தேறிவிடும்’ என்று ஆரம்ப காலத்தில் சொன்ன அதே டயலாக்கை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறாராம் பிரேமலதா. விஜயகாந்த் வரலைன்னா நாங்க குடுத்த வாக்குறுதி எதையும் காப்பாற்ற முடியாது என்று மணி அமைச்சர் கறார் காட்டியிருக்கிறாராம்.
என்ன செய்யப்போகிறார் பிரேமலதா?