பாவங்களைத் தீர்க்க பிராயசித்தங்கள் போதுமா? ஸ்ரீமத் பாகவத விளக்கம் இதோ!

பிராயச்சித்தம் என்பது இந்து தொன்மவியலின் படி பாவத்திற்கு செய்யப்பட வேண்டிய பரிகாரமாகும்.


மிகப்பெரிய பாவமாக கருதப்படும் கொலைப் பாவமானது பிரம்மஹத்தி தோசம் என்று அழைக்கப்படுகிறது.[1] அத்தகைய பாவத்திற்கும் சிவபெருமானை சரண்புகுவதால் பிராயச்சித்தம் ஏற்படுமென இந்து நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே பரீக்ஷித் மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி:'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?

யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறதே! அந்த மாதிரிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும் பாபத்தைப் பண்ணுகிறான்.

அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில்லையே . அது வீண்தானே? '.அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பார்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

ஒருத்தர் பிராயச்சித்த கர்மாவாக ஏகாதசி உபவாஸம் இருந்து, துவாதசி பாரணை பண்ணி, யாத்ரா தானம் பண்ணி, க்ஷேத்ராடனம் கிளம்புகிறார். . புண்ய நீராடிவிட்டுத் திரும்பி வந்து தசமி ராத்திரி உபவாஸம்; ஏகாதசி நிர்ஜல உபவாஸம். துவாதசி பாரணை பண்ணி அதற்கப்புறம் சகஸ்ரநாமம் சொல்லி, கீதையைப் பாராயணம் பண்ணி, ராத்திரி யோகம் என்ற நிலையில் பகவானைத் தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால் ...பாபங்கள் அகலும்.

ஆனால் உபவாஸம் இருந்தவருக்கு உணவு உள்ளே போனதுமே உறக்கம் வருகிறது. அப்புறம் இரவெல்லாம் எவ்வாறு தியானம் செய்வார்? ஆனால் சாஸ்திரமோ 'தூங்காதே' என்கிறது.இதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டால் ஒரு வழியிருக்கிறது.

பகலவனைக்கண்ட பனிபோல் பாபம் நம்மை விட்டு விலக வேண்டுமானால் நாராயண நாமத்தை பாராயணம் பண்ணவேண்டும்.

'வாசுதேவ பாராயண: ' - திருஷ்டாந்தத்தோடு சொல்கிறார் சுகபிரும்மம்.

ஒரு மகாரிஷி காட்டு வழியே வருகிறார். மூங்கிலெல்லாம் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பிடித்து எரிகின்றன. காட்டைத் தகிக்கிறது அக்னி! மகாரிஷி பார்த்துக் கொண்டேயிருக்கிறார் ஐயோ! இவ்வளவு பசுமையான காடு அழிந்து கருகிப் போய் விட்டதே! என்று ரொம்ப வருத்தம் அவருக்கு.

க்ஷேத்திராடனமெல்லாம் முடித்து, மூன்று மாதம் கழித்து அந்த வழியிலே திரும்புகிறார். பார்த்தால், அந்த இடமெல்லாம் - கரிக்கட்டையாக இருந்த இடமெல்லாம் - பசுமையாக ஆகிவிட்டது.

அப்போதுதான் அவர் மனத்திலே ஒன்று தோன்றியது. அக்னி இருக்கிறதே,, அது எல்லாவற்றையும் எரிந்தது - எதை எதை என்று பார்த்தால், பூமிக்கு மேல இருக்கும் படியான மரத்தை எரித்ததே தவிர பூமிக்குள்ளே இருக்கும்படியான வேரை அழிக்கக் கூடிய சக்தி அக்னிக்கு இல்லை.வேர் உள்ளே இருந்ததனாலே,மழை பொழிந்ததுமே முளைத்துவிட்டன மூங்கில்கள்.

அந்த மாதிரிதான். எத்தனையோ பிறவிகள் நாம் அடைந்து , துர்லபோ மனுஷோ தேகோ என்று சொல்லப்படுகிற மனித ஜன்மாவை அடைந்திருக்கிறோம். பாபத்தைத் தூண்டக்கூடிய வாஸனா பலம் உள்ளுக்குள்ளே வேர் மாதிரி இருக்கிறது.

பிராயச்சித்த கர்மா இருக்கிறது பாருங்கள்...அது மேலே இருக்கிற மூங்கில்கள், செடி கொடிகளை அழிப்பது போல, பாவத்தை போக்குமேயொழிய, பாபங்களைச் செய்வதற்கு நம்மைத் தூண்டக்கூடிய, உள்ளே இருக்கிற கெட்ட வாசனைகளைப் போக்கடிக்காது. அந்தச் சக்தி பிராயசித்த கர்மாக்களுக்குக் கிடையாது. பாபங்களை வேரோடு களைய வேண்டுமானால், வாசுதேவ பாராயண: எம்பெருமானை உள்ளுக்குள்ளே நிலைபெறச் செய்ய வேண்டும். விடாமல் அவனை நினைக்க வேண்டும்.

பிரஹலாதனுக்கு இந்த அறுபடாத நினைவு சித்தித்தது. சதா சர்வ காலம், சந்தத் தாரையாக விடாமல் அவனை யார் நினைக்கிறார்களோ, அத்தகையவர்களை மறுபடியும் பாபம் செய்கிற சித்தம் ஏற்படாமல் ரக்ஷிக்கிறான்...பரமாத்மா! ஆகையினாலே, பரமாத்மாவை மனத்தில் தியானம் பண்ண, நாம் கெடுதல் நீங்கி பவித்ரமாகிறோம்.