மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி ஆலய சிறப்பு தெரியுமா!

தேவி கங்கம்மா என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில், பெங்களூரிலுள்ள யஷ்வந்பூர், மல்லேஸ்வரம் 15 குறுக்கு தெருவில், உள்ளது.


இந்து புராணத்தில் கூறப்பட்டிருக்கும் தெய்வங்களில் மக்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தெய்வம், நதி அன்னை கங்காதேவி தான் என்கிறார்கள். தொன்மை, தூய்மை பக்தி இவற்றின் அடையாளமாக அருள்பாலித்திருக்கும் தேவி கங்கம்மாவைத் தரிசிக்கவென பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தேடி வருகிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

2004 ஆம் ஆண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. ஆனால் 1928 லிருந்து மாரியம்மா- கங்கம்மா-வழிபாடாக பெங்களூரில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த வருடம் மே மாதம் 9 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அன்னைக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். கரகம், சண்டை மேலும் புலி ஆட்டம் ஆகியவை ஊர்வலத்தில் சிறப்பம்சங்களாக இருக்கும். பெண் வேடமிட்டு ஆண்கள் ஊர்வலத்தில் வலம் வருவர். திருவிழாவின்போது அன்னதானம் பெரிய அளவில் பள்ளி மைதானங்களில் நடத்தப்படும்.

இங்கு பல்வேறு கோரிக்கைகளோடு தேவியைத் தரிசிக்க வருகின்ற பக்தர்கள் பயபக்தியோடு அர்ச்சகரிடம் பூஜைக்குரிய மலர்களைத் தர அவர் அவற்றை தேவியின் சிரசின் மீது சமர்ப்பிக்கிறார். சிறிது நேரத்தில் அந்த மலர்கள் தானாகவே கீழே விழுகின்றன. தாங்கள் கொடுத்த மலர்கள் தேவியின் காலடியில்  வலப்புறம் விழுந்தால் கோரிக்கை உடனடியாக நிறைவேறும்; நடுவில் விழுந்தால் சற்றுத் தாமதமாகும்; இடப்புறம் விழுந்தால் கோரிக்கை நிறைவேற  வாய்ப்பில்லை, மாற்று திட்டம் மேற்கொள்ளலாம் என்று தேவி அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆலயத்தில் இந்த மலர் கோரிக்கை மிக முக்கியமான வழிபாடாகக் கருதப்படுகிறது.