இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்க வேண்டுமா? நெல்லிக்காய் தீபம் ஏற்றி நன்மை பெறலாமே

நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.


திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.

எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதன் வெளிப்பாடு. வீட்டில் இருக்கும் இருளான எதிர்மறையை அக்னியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காகத்தான் விளக்கு அன்றாடம் காலை மாலை ஏற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் எதிர்மறை மறைந்து நல்லவை நடக்கும். விசேஷ நாட்களில் எலுமிச்சை, அகல், மாவு தீபம் கூட நாம் ஏற்றுவதுண்டு.

அது போலவே நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவதும் நன்மை என சொல்லப்படுகிறது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் நம் துன்பங்கள் மறைந்து இழந்ததை மீண்டும் பெறலாம். விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது. அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம்.

நெல்லிக்காய் விளக்கு ஏற்றும் முறை : காட்டு நெல்லிக்காயை விளக்கேற்ற பயன்படுத்தினால் நல்லது ஏனெனில் பெரியதாக இருப்பதால் தீபம் சரியாக ஏற்ற முடியும். அளவில் பெரியதாக வாங்கி எண்ணெய் திரி வைக்கும் அளவிற்கு மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள். அதே போல் அதன் அடிப்பகுதியில் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் பஞ்சுத் திரியை நெய்யில் நனைத்து அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள்.

விசேஷ நாட்களில் இது போல விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம். சொத்து, பொருட்களை நஷ்டத்தால் இழந்திருந்தால், அவற்றை மீட்டு மீண்டும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.