எடப்பாடி பழனிசாமியின் முதியோர் தின வாழ்த்து! முதியோரை போற்றுவோம் பாதுகாப்போம் ..!

வருடம் தோறும் அக்டோபர் 1ம் நாள், சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து முதியோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்று வள்ளுவப் பெருந்தகை பெரியோர்களின் சிறப்பைப் பற்றி கூறுகிறார். நாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நமது தலையாய கடமையாக கொண்டு செயல்படவேண்டும்.

தமிழக அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடவும், மூத்த குடிமக்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய 46 ஒருங்கிணைந்த வளாகங்களின் மூலம் 1,060 முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன் 21 முதியோர் இல்லங்கள் நடத்தப்பெற்று, அவற்றில் 723 முதியோர் தங்கி பயனடைந்து வருகின்றனர். சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் படி, தமிழ்நாட்டில் 91 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில், ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242 சமுதாய சமையற்கூடங்கள் மூலம் 78,937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக 4,942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழக அரசு, சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019-ம் ஆண்டிற்கான “வயோஸ்ரேஷ்தா சம்மன் விருது” தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கவுரவித்துள்ளது. முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம்மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். முதியோரை போற்றுவோம்! முதியோரை பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.