தினமும் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்தே தீரவேண்டும் என்று டெல்லியில் இருக்கும் திருமாவளவனும், ரவிக்குமாரும் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று அவர்கள் செய்தது என்ன தெரியுமா?
ரூபாய் நோட்டில் பெண் படத்தைப் போடணுமாம்! நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்பி!

“இந்தியாவில் காகித பணம் அச்சிட ஆரம்பித்து 200 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்துக்குப் பதிலாக, சாரநாத் தூணின் சிங்கத் தலையை, ரூபாய் நோட்டில் அச்சிட்டோம். 1969 ஆம் ஆண்டில் - சரியாக அரை நூற்றாண்டுக்கு முன் - மகாத்மா காந்தி நூற்றாண்டின் நினைவாக, ரூபாய் நோட்டில் அவரது உருவம் அச்சிடப்பட்டது. காகித நோட்டு அச்சிடுவது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் துவங்கியிருந்தாலும் நாணயம் அச்சிடும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே இங்கு நடைமுறையில் இருந்துள்ளது.
வியப்பளிக்கும் விதத்தில், இந்தியாவெங்கும் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில், அரசனின் பெயர் அல்லது உருவமே பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இது ஆண் ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாகவே உள்ளது. ரூபாய் நோட்டு என்பது நமது பொருளாதாரக் கருவியாக இருந்தாலும் அது சமூகக் குறியீடாகவும் திகழ்கிறது. அதனால் தான் மகாத்மா காந்தியடிகளுக்கான நமது மரியாதையை வெளிப்படுத்தும்விதத்தில் அவரது உருவத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுகிறோம்.
இப்போது சுதந்திர இந்தியாவின் முழுப் பொறுப்பிலான நிதி அமைச்சராக ஒரு பெண் நியமிக்கப்பட்டதன்மூலம், நாட்டின் பொருளாதார விவகாரங்களை நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஒருவரின் உருவத்தை அச்சிடுவதற்கு இதுவே சரியான தருணம். இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் உருவத்தை நமது நாட்டின் ரூபாய் நோட்டில் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்” என கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ரவிக்குமார் எம்பி கூறியிருக்கிறார்.
நல்ல யோசனைதான். ஆனா, அவங்க சரஸ்வதி இல்லைன்னா லட்சுமி படத்தைத்தானே போடுவாங்க. பரவாயில்லையா..?