அரசியலில் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே கமல்ஹாசன் நினைத்து கட்சி ஆரம்பித்தார். ஆனால், கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் தடுமாறுகிறார் இப்போது.
கூட்டணிக்கு ஆளில்லாத சோகத்தில் கமல்ஹாசன்! தோள் கொடுப்பாரா சுதீஷ்?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்ற அதீத நம்பிக்கையால், திடீரென அரசியலில் குதித்து தமிழகமெங்கும் கட்சியை வளர்க்கிறேன் என்று டூர் அடித்துவந்தார். தேர்தல் நேரத்தில் தனக்கு காங்கிரஸில் இருந்து நிச்சயம் அழைப்பு வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார். அதற்காக ராகுலை சந்தித்து அச்சாரம் போட்டுவைத்தார்.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் தனக்கு இடம் கிடைத்தால் போதும் என்று நிம்மதியாக அங்கே செட்டில் ஆகிவிட்டது காங்கிரஸ். உள் ஒதுக்கீடாக ஒரு சீட் காங்கிரஸ் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் கமலுக்குப் போய்விட்டது. ஆக, தேர்தலில் நிற்போம் என்று வீராப்பாக பேசிவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார் கமல்.
டி.டிவி.தினகரன் கமல்ஹாசனை சேர்த்துக்கொள்ள ஆரவமாகத்தான் இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன்தான் தயங்குகிறார். தினகரன் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், அவருடன் சேர்வது அரசியல் தற்கொலைக்கு சமம் என்று நினைக்கிறார். தனித்து நிற்பதாக அறிவித்திருக்கும் சீமானுடன் சேர்வதற்கும் யோசிக்கிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே நபர் சுதீஷ் மட்டும்தான் என்கிறார்கள். ஏனென்றால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு உறுதி கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், சீட் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று கருதுகிறது. அதாவது இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் நிலையில் தங்களுக்கு 4 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சுதீஷ்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்று உறுதியாக ஆளும் கட்சியில் இருந்து தெரிவிக்கப்பட்டு விட்டதாம். தி.மு.க. கூட்டணியில் அழைப்பே இல்லாத நிலையில், அ.தி.மு.க.வில் நீடிப்பதா அல்லது கமல்ஹாசன், தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாமா என்று யோசித்துவருகிறார் சுதீஷ்.
ஆனால், பிரேமலதா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறார் சுதீஷ். தான் கெட்டுப்போவது மட்டும் போதாது என்று கமல்ஹாசனையும் தினகரனுடன் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் சுதீஷ். தினகரன், சுதீஷ் வலையில் கமல் சிக்குவாரா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம்.