பெண்களுக்கு மட்டுமே இந்த 18 படி பூஜை? புதுமை ஆலயம்!

அகிலாண்டேஸ்வரி, ஆதி பராசக்தி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகடூர் எனும் ஊராகும்.


ராவண வதம் முடிந்த பிறகு பிரம்மஹத்தி தோஷம் ராமரைப் பற்றியது. அதைப் போக்க ஆதிசேது எனும் ராமேஸ்வர சமுத்திர மணலை அளாவி எடுத்து ஈசனை தம் தளிர்கரங்களால் லிங்க உருவில் குழைத்து நாள் தவறாது பூசித்தார் ராமர். கடல் அலைகள் பிரம்மஹத்தி தோஷத்தை தம்மோடு கரைத்துக் கொண்டன. தோஷம் விடுபட்ட ராமர், சூரியனாக ஜொலித்தார். ஆயினும், உள்ளுக்குள் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது.

பிரம்மஹத்தி தோஷத்தின் வீர்யம் புகை போன்று சுழன்று கொண்டிருந்தது. மாமுனிகளை அண்டி அமர்ந்து ஆறுதல் அடையலாமே என்று நினைத்த ராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அகத்தில் ஞானத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்த அகத்தியரை நாடினார். இதற்கொரு வழி கூறுங்களேன் என்று கேட்டுப் பணிவாக நின்றார். அகத்தியர் ‘‘ராகவா உனக்கு ஒரு குறையும் ஏற்படாது.

நீ தீர்த்தமலை சென்று வா. உன்னைச் சுழற்றும் இந்த தோஷம் பரிபூரணமாக நீங்கும். கல்யாண காமாட்சி உன் கலக்கம் தீர்ப்பாள்,’’ என்றார். அதேசமயம், குமார சம்பவம் நடைபெற வேண்டுமென தேவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மன்மதன் தன் தூண்டுதலால் அது நிகழும் என்று சற்று கர்வம் கொண்டிருந்தான். ஈசனை தன் ஆளுமையில் கொண்டுவரத் துடித்தான். ஐயனருகே மன்மதன் வந்தான். ஈசனை சூழ நினைத்தான். ஆனால் சிவனின் ஞானாக்னி, மன்மதன் எனும் காமத்தை பொசுக்கியது.

வெற்றுச் சாம்பலானான் மன்மதன். சுய உடலை இழந்த மன்மதன் உடலற்றவனானதால் அனங்கன் என்று அழைக்கப்பட்டான். பார்வதி இச்செயலைக் கண்டு வருந்தினாள். மன்மத பாணமே தோற்றுவிட்டதால் தான் ஈசனுடன் இணைய இயலாது போய்விடுமோ என்று மனம் உடைந்தாள். பூவுலகில் தவம் செய்து ஈசனோடு மீண்டும் இணைய உறுதி கொண்டாள். தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் மாதா. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார்.

தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதிதேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர்.

ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. ராமர், பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார். தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள்.

பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள். மேற்குப்புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது.

ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தல விநாயகரான செல்வ விநாயகரும், அவரை அடுத்து ஆறுமுகம் கொண்ட ஷண்முகநாதனும் தரிசனமளிக்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில், ‘மனோன்மணி’ உபாசனையை உலகில் பரப்பிய காடு வெட்டி சித்தர் சிவலிங்க ரூபமாய் சித்தேஸ்வரன் என்ற பெயரில் அருள்கிறார். அடுத்து தலத்தின் பிரதான நாயகி, ஐம்பது அடிக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் ஸ்ரீசக்ர மேடை மேல் நின்று அருள்கிறாள்.

மூன்று தள விமானத்தின் கீழ் தன்னிகரில்லாப் பெருமையுடன் காட்சி தரும் கோலம், ஒüவைக்கு நெல்லிக்கனி தந்து சரித்திரத்தில் சாகாவரம் பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சி வழிபட்ட அம்பிகை ஆலயங்களில் முதன்மையானது இத்திருக்கோயில். இந்த அம்மன் ஆலய அமைப்பே வித்தியாசமானது! புதுமையானது! ஆம், அம்பிகை சந்நிதியை அடைய சபரி மலையில் உள்ளது போலவே 18 திருப்படிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், தேகம், கையறவு எனும் 18 குணங்களாக இந்தப்படிகளை உருவகம் செய்துள்ளனர் பெரியோர்கள்.

இவற்றை கடந்து சென்று, காமாட்சியை தரிசிக்கலாம். சபரிமலையில் உள்ள 18ம் திருப்படி, ஆண்களால் பூஜிக்கப்படுகிறது. தர்மபுரி காமாட்சி சந்நிதியின் முகப்பிலுள்ள 18ம் திருப்படியை பெண்கள் மட்டுமே பூஜிக்கிறார்கள். பிரதோஷ காலத்தில் உமையோடு கூடிய பிரதோஷ மூர்த்தி மூன்றாம் சுற்று வரும்போது, சிவசக்தி ஐக்கியநிலையை உணர்த்தும் விதமாக இந்தப் பதினெட்டு படிக்கருகில் அன்னையை நோக்கி "பிரதோஷ நாயகர்' காட்சி தரும் அழகை நேரில் அனுபவித்து அறியலாம்.

இந்த அம்பிகையின் திருமேனி திருக்கோயிலை வலம் வரும்போது திருப்பாதம் தாங்கி வருபவர்களும், குடையை எடுத்து வருபவர்களும் முற்றிலும் பெண்களே! தினசரி பக்தர்கள் திருப்படி பதினெட்டுக்கும் குடம், குடமாக நீர் சொரிந்து- மலரிட்டு வழிபட்டுப் பலனடைகிறார்கள். தாய்மையின் பெருமையை உணர்த்தும் இத்தாய்க்கோயிலில் வீற்றிருக்கும் அன்னை காமாட்சியை திருமண வரம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும் திருப்படி பூஜை செய்து வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு.

இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள். சங்கு சக்ரம் ஏந்தி மஹிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருள்கிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள். அடுத்தது மல்லிகார்ஜுனனின் பிரதான சந்நதி.

தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்தால் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இடது புறம் துர்வாசரை அவமதித்த சாபம் தீர இத்தலத்து ஈசனை வணங்கி சாபநிவர்த்தி பெற்ற ஐராவத யானையையும் காணலாம். கருவறையின் முகப்பில் உள்ள கஜலட்சுமியை, ஒரு யானை துதிக்கையைத் தூக்கியும், ஒரு யானை மண்டியிட்டு வணங்கும் அதிசய அமைப்பும் சிலிர்க்க வைக்கிறது.