உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்குக் காவித் துண்டா? வீரமணி ஆவேசம்

உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்குக் காவித் துண்டு அணிவித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.


உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்றிரவு (28.2.2021) கோழைத்தனமாக காவித் துண்டை அணிவித்தும், தலைக்குக் குல்லாய்ப் போட்டும் தங்களது அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில்கூட இத்தகைய ஈன செயலில் ஈடுபட்டு இருப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை எளிதில் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

தமிழ்நாடு பெரியார் மண் - தங்களின் மத வாத ஆட்டம் காட்டி வெற்றி பெற முடியாது என்று தெளிவாகத் தெரிந்து கொண்ட நிலையில், தங்கள் ஆத்திரத்தை இந்த வகையில் காட்டியுள்ளனர். இதன் விளைவை வட்டியும் முதலுமாகக் காவி கட்சிக்கும், அதற்குத் துணை போகும் கூட்டணிகளுக்கும் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

காவல்துறை அதிகாரிகள் வழமைபோல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் செயல் என்று பிரச்சினையைத் திசை திருப்பி, உண்மை காவிக் குற்றவாளிகளைக் காப்பாற்றச் செய்தால் மக்களின் கடும் எதிர்ப்பு வெடிப்பது உறுதி.

பொதுவாக காவி அணிவிப்பவர்கள் எல்லாம் மனநலம் - இனநலம் எல்லாம் பாதித்தவர்கள்தான் என்றாலும், உண்மை குற்றவாளிகளைத் தப்ப விடுதல் காவல்துறைக்கும், பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துள்ள தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அவலம் - கடும் விலை தரவேண்டியிருக்கும் இதற்கு! பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சை காப்பாற்றுவதா காவல்துறை கடமை? அதன் ஜாடைக்கு அடிபணியப் போகிறதா? எங்கே பார்ப்போம்?

வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி உலா வந்தவர் தந்தை பெரியார். அவர் மறைந்து 47 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அவர் சிலையைக் கண்டே நடுநடுங்கும் நிலைதான் மதவாத - ஜாதி வாத காவிக் கூட்டத்திற்கு -தக்க பாடம் கற்பிப்போம் என்று வீரமணி கூறியிருக்கிறார்.