எடப்பாடியார் அரசுக்கு கி.வீரமணி பாராட்டு. அண்ணா பல்கலையில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதுடன் அதில் உறுதியாக இறுதிவரை இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, உலகத் தரம் என்ற தூண்டிலைப் பயன்படுத்தி, அதனை மத்திய அரசு தனது வசமாக்கி, 69 சதவிகித இடஒதுக்கீட்டினையும் ஒழித்துக்கட்டும் பேரபாயத்தைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரத் தயங்கக்கூடாது என்பதை நாமும், திமுக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் போன்ற பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி, அறப்போர் ஆர்ப்பாட்டங்களை நடத்திய நிலையில், தமிழக அரசின் உயர்க்கல்வி அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் இன்று காலை கொடுத்துள்ள பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்தர கல்வி நிறுவன அந்தஸ்து தந்து "தன் உயர் கல்வி நிறுவன"மாக்குவதை தமிழக அரசு 4 காரணங்களுக்காக ஏற்காது என்று திட்டவட்டமாய் கூறியிருப்பது - வரவேற்கத்தக்கது.

1. 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு அதனால் ஆபத்து.

2. கூடுதல் கல்வி கட்டணங்கள் வசூலிக்கும் அபாயம்.

3. வெளி மாநில மாணவர்களுக்குக் கதவு முழுவதும் திறக்கப்பட்டுவிடும்.

4. அரசுக்கு உட்பட்டதுதான் அண்ணா பல்கலைக்கழகம். அதில் துணைவேந்தர் சூரப்பா தனியே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்ட அதிகாரத்தைக் கையில் எடுத்து தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது!

இந்த நிலைப்பாட்டில் தமிழக அதிமுக அரசு உறுதியாக இறுதிவரை இருப்பதோடு, எந்தவித நிர்பந்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது என்பதையும் வற்புறுத்துகிறோம். துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.