பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி

இந்தியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா விடிய விடிய களைக்கட்ட தயாராக உள்ளது.


கோவை ஈஷா யோகா மையத்தின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர்.  

இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டு புற இசை கலைஞரும் சூது கவ்வும், ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பேட்ட உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள திரு.அந்தோணி தாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் திரு.கார்த்திக் ஆகியோர் பங்கேற்று தமிழ் பாடல்களை பாட உள்ளனர். மேலும், குஜராத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் திரு.பார்த்தீவ் கோஹில் மற்றும் திரு.ஆதித்யா கத்வியும் தங்கள் இசையால் மக்களை கவர உள்ளனர்.

இதுதவிர, புகழ்பெற்ற இந்திய கவிஞரான கபீரின் பெயரில் இசை குழுவை உருவாக்கி நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ‘கபீர் கஃபே’ குழுவினரும், லெபனானைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்களும் மக்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்த உள்ளனர்.

தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனாவுடன் தொடங்கும் விழா லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

கூடுதல் தகவல்களுக்கு: tamil.sadhguru.org/MSR, 83000 83111

ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் சேனலில்களிலும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.