இ.பாஸ் சிரமம் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கிறதா? அதிகாரிகளிடம் விசாரித்த முதல்வர் எடப்பாடி!

தொடர்ந்து இ.பாஸ் வழங்குவதில் பல்வேறு குழப்பங்கள், சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


அதன்படி, தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் உடனே இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது.

ஆதார் அல்லது ரேசன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். இது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலமே வழங்கப்படுகிறது என்பதால், யாருக்கும் சிக்கல் இல்லை.

இதையடுத்து இத்தனை நாட்களும் வெளியூர்களில் தங்கியிருந்த பலரும் இருசக்கர வாகனத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அறிவிப்பு செய்தபடி, அனைவருக்கும் இ.பாஸ் சிரமம் இல்லாமல் கிடைக்கிறதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் மட்ட அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்துகொண்டாராம்.