திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? ஜாதகத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து பரிகாரம் செய்யுங்கள்!

அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவர் குரு. இவர் பார்வை பட்ட இடம், பார்வை பட்ட கிரகங்கள் நன்மையையே செய்கிறார்.


மனித உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒழுங்கப்படுத்தி சீராக இயங்க செய்பவர், குரு ஆவார். சுப கிரக வரிசையில் முதலிடம் பெறுபவர். ஜோதிடத்தில் குரு என்றாலும் வியாழன் என்றாலும் ஒன்று தான். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். 

ஆண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் (குரு) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால், அதை 'வியாழ நோக்கம்" என்பார்கள். பெண்களுக்கு கோசாரப்படி வியாழன் (குரு) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தையோ பார்த்தால், அது 'வியாழ நோக்கம்" எனப்படுகிறது. 

வருடத்துக்கு ஒரு முறை குரு ராசி விட்டு ராசி இடம் பெயருவார். கோசாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் மட்டும், திருமணம் நடைபெற்று விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கோசாரத்தில் இருக்கும் குரு, திருமணம் கைகூடி வர 20 சதவிகிதம் மட்டுமே பலன்களை தருவார். இதனால் சிலர் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு மாலையிட்டு வணங்கியும், விளக்கு வழிபாடு என பரிகாரங்கள் செய்தும் திருமணம் நிறைவேறவில்லையே என வருந்துபவர்களும் உண்டு. இதற்கு தசாபுத்தி, கிரகங்கள் இருக்கும் இடம், கிரகப் பார்வை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.  

ஒருவரது ஜாதகத்தில் முக்கியமாக தசா புத்தி பலன்களைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் உங்கள் லக்னத்தை ராசியாக்கி, அதற்கு ராசிபலன் பாருங்கள். ஏனெனில் திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் தசாபுத்தி உதவினால் மட்டுமே தான் நடைபெறும். 

நாம் பார்க்கும் வரன்களுக்கு அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான தசை நடந்தாலோ, குரு பார்வை இருந்தாலோ, திருமணம் நடந்து விடும். கோட்சாரத்தைப் பார்ப்பதை விட தசாபுத்தி பலன்களைப் பார்க்க வேண்டும்.  

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். 

குரு பலத்தால் நமக்கு பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் கிடைக்கிறது. உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றால், அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது எனப் பொருள். அரிய சாதனைகளைச் செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான். 

குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். அறிவு உடைய குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.