100 வகையான நைவேத்யங்கள்! விறகு அடுப்பின் மீது 7 பானைகள்! கடைசி பானைக்கு முன்பாக வேகும் முதல் பானை! ஜெகநாதன் கோவில் அதிசயங்கள்!

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகன்நாதர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.


விஷ்ணு காலையில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு இங்கு வருவதாக நம்பிக்கை. அதனால் இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். 

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் காலை முதல் இரவு வரை 6 கால நைவேத்யங்கள் நடைபெறுகின்றன  

சோபால வல்லபபோகா: இது காலையில் பகவானுக்குச் செய்யப்படும் நைவேத்தியம். பக்தர்களுக்கு விநியோகம் கிடையாது. 

சகல தூபா போகா: காலை 10 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யத்தில் எண்டூரி கேக்குகள், புளிசாதம் உட்பட 13  உணவு வகைகள் வைக்கப்படுகின்றன. இவற்றில் சாதங்கள் விற்பனைக்கு வெளியே வருகின்றன.  

படா சங்க்ருதி போகா: காலை 11 மணிக்கு செய்யப்படும் இந்த நைவேத்யம் ஆதிசங்கராச்சாரியாரால் உருவாக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. இது முடிந்ததும் அந்த பிரசாதங்கள் அனைத்தையும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டுமென ராஜாவிடம் அவர் கூறினாராம். ஆக இவை பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.  

மத்யான தூபா: பகல் 12 மணி செய்யப்படும் இது பக்தர்களுக்கு கிடையாது. 

சந்த்யா தூபா போகா: இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யமும் பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை. 

படா சிம்ஹாரா தூபா போகா: இரவு கால நைவேத்யம். இரவு 9:30 மணிக்கு மேல் இனிப்புப் பலகாரங்கள், இளநீர், தேங்காய் சாதம், தயிர், வாழைப்பழங்கள் பக்தர்களுக்கு சகாய விலையில் விற்கப்படுகின்றன. 

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் தயாரிக்கப்படும் 100 வகையான நைவேத்யங்கள் இரு வகைப்படும். அவை பக்கா, சுக்கா. பக்கா என்றால் வேக வைத்துத் தயாரிக்கப்படுபவை.  சுக்கா என்றால் ரொட்டி, பிஸ்கெட்டு, கேக்குகள் மற்றும் இனிப்பு பண்டங்களை குறிப்பது.  

பூரி ஆலய சமையலறையில் அன்ன சௌலி, அகியா சௌலி, பிதா சௌலி என 3 வித அடுப்புகள் உள்ளன. அன்ன சௌலி - அன்னங்கள் தயாராகின்றன. அகியா சௌலி -  வேக வைக்கப் பயன்படுகின்றன. பிதா சௌலி -  இது கோயிலுக்குள்ளிருக்கும் எமர்ஜென்சி சிறு சமையலறையாகும். அங்கு சிமெண்ட் அடுப்புகள் உள்ளன. அங்கு ஏற்றப்படும் அக்னியை வைஷ்ணவ அக்னி என்கின்றனர். 

இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.

இது இன்று வரை மர்மமாகவே உள்ளது இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் சாப்பிட கிடைக்கும். எவ்வளவு சாப்பாடு செய்தாலும், துளியளவும் வீணாவதில்லை.