பொதுவாக யானை முகத்தோடு காட்சி தரும் விநாயகரை பல தலங்களில் தரிசித்திருப்பீர்கள்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? இதோ இவரை வணங்கினால் போதும்!

அவர் அபூர்வமாக மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள தலம் சிதம்பரத்தில் உள்ள பால விநாயகர் ஆலயம். பூலோக கைலாசம் எனப்படும் சிதம்பரத்தில்தான் விநாயகர் தோன்றியதாக வரலாறு உண்டு. இங்கு தேரோடும் நான்கு வீதிகள். அதில் தெற்கு வீதியில் தெற்கு கோபுர வாசல் எதிரில் உள்ளது இந்த ஆலயம். இங்குள்ள நரமுக விநாயகர் நான்கு யுகங்களாக இருக்கிறார். ஆதியில் விநாயகர் இந்தத் தோற்றத்தில் தான் இருந்தார். பின்னர் அவருக்கு ஆனைமுகம் அமைந்து ஆனைமுகத்தான், தும்பிக்கையான் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறார்.
மூலவர் விநாயகர் தவிர இந்த ஆலயத்தில் ராகு, கேது, ஆஞ்சநேயர், திருமாலும் அருள்கின்றனர் அனுமனும் விநாயகரும் ஒரே ஆலயத்தில் இருப்பது விசேஷம். ஏனென்றால் இருவருமே சனி கிரகம் பிடிக்காதவர்கள். ராகு கேது தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் இத்தல விநாயகரை வழிபட்டால் நீங்குகிறதாம். மேலும் கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கவும் கடன் தொல்லையிலிருந்து விடுபடவும் இவர் அருள்புரிகிறாராம்.
இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் தங்கள் தேர்வு எழுதப் பயன்படுத்தப் போகும் பேனா, பென்சில் போன்ற பொருட்களை இந்த விநாயகப் பெருமான் முன் வைத்து வழிபட்டு செல்கிறார்கள். அதனால் அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதியாக நம்புகின்றனர்.